பொருளடக்கம்
நிலத்து நீரை உலர விடாத உயிர்வேலி
வீட்டுக்காய்கறி தோட்டம்
மண் பூச்சு
விதை நேர்த்தி
நிலத்து நீரை உலர விடாத உயிர்வேலி
இயற்கை வேளாண்மையில் தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான யுக்தி’’ நிலம்,உலராமல் இருக்க உயிர்வேலி!
‘‘காத்து, அது போற இடத்துல இருக்கற ஈரத்தை எல்லாம் உறிஞ்சுகிட்டு, நிலத்தை உலரவைச்சிட்டுப் போயிடும். காத்து, ஈரத்தை எடுத்துட்டுப் போகாம தடுக்குறதுதான் உயிர் வேலி வேளாண்மை. சவுண்டல், அகத்தி, கிளரிசிடியா, நொச்சி மாதிரியான பயிருங்களை வேலிப்பயிரா நட்டு, உயிர்வேலி அமைச்சுக்கணும். வேலியோரமா வளந்து நிக்குற மரங்க, காத்தோட வேகத்தை தடுத்து, நிலத்துல இருக்கற ஈரப்பதத்-தைத் தக்க வைச்சுக்கும். உயிர்வேலியை மழைக்-காலத்துல நட்டுட்டா, நல்லா வேர் பிடிச்சுக்கும். பிறகு எந்த வறட்சியிலும் காஞ்சு போகாது.
தோட்டத்திற்கு ஒரு நல்ல வேலி மிகவும் அவசியம். உயிர் வேலியே மற்ற வேலிகளைவிட சிக்கனமாகும். வறட்சி எதிர்ப்புத்திறன்,விதையின் மூலம் சுலபமான பயிர் பெருக்கம், விரைவான வளர்ச்சி அடர்த்தியான இலைகள், கடும் கவாத்திற்கு தாங்கும் திறனுடன் இருக்கும் செடிகள் உயிர் வேலிக்கு ஏற்றவையாகும்.
காற்றுத் தடுப்புக்கு தோட்டத்தைச் சுற்றிலும் பல வரிசைகளில் நடப்பட்டு காற்றின் வேகத்தை குறைப்பதால் காற்று அதிகமாக வீசும் பகுதிகளில் காற்றுத் தடுப்பு வேலியானது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. பொதுவாக காற்றுத் தடுப்பு வேலி உயரத்தைவிட நான்கு மடங்கு தூரம் திறம்பட செயல்படும்.
வேலிமசால்,கிளுவை போன்றவற்றை உயிர் வேலியாக அமைப்பதன் மூலம் அவற்றை கவாத்து செய்யும் போது கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தலாம்.
source: பசுமை விகடன் & தோட்டகலை துறை.
Go to top
வீட்டுக்காய்கறி தோட்டம்
காய்கறிகள் நமது அன்றாட வாழ்விற்கு மிகவும் முக்கியமானதாகும். அதுவும் குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் அவசியம். இவை உணவின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உணவை ருசியாக்குகின்றன. ஊட்டச்சத்து வல்லுனர்களின் பரிந்துரைப்படி, ஒரு வயது வந்த நபர், சீரான திட்ட உணவிற்கு ஒரு நாளைக்கு 85 கிராம் பழங்களையும் 300 கிராம் காய்கறிகளையும் உண்ண வேண்டும். ஆனால் தற்போதைய காய்கறி உற்பத்தியை கணக்கிட்டு பார்க்கும் பொழுது ஒரு நபர் ஒரு நாளுக்கு 120 கிராம் காய்கறிகளையே பெற முடிகிறது.
மேற்கண்ட கருத்துக்களை மனதில் கொண்டு நாம் நமது அன்றாட வாழ்விற்கு தேவையான காய்கறிகளை வீட்டுக் காய்கறி தோட்டத்தில், நம்மிடம் உள்ள சுத்தமான தண்ணீர், சமயலறை மற்றும் குளியலறை கழிவு நீரை பயன்படுத்தி உற்பத்தி செய்யலாம். இதன் மூலம், உபயோகமில்லாத தண்ணீர் தேங்கி நிற்பதையும், இதனால் ஏற்படும் சுகாதார கேட்டையும், சுற்றுச் சூழல் மாசுபாட்டையும் தடுக்க முடிகிறது. பயனுள்ள வகையில் காய்கறி உற்பத்தியை மேற்கொள்ளமுடிகிறது. மிகக் குறைவான இடத்தில் சாகுபடி செய்யப்படுவதால், மிக எளிதான முறையில் நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடிகிறது. மேலும் பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. நோய் மற்றும் பூச்சி தாக்கிய பகுதிகளை செடிகளில் இருந்து அகற்றினால் போதுமானதாகும். இதனால் காய்கறிகளில் நச்சு இரசாயணங்கள் படிவதை தவிர்க்க முடிகிறது.
இடம் தேர்வு செய்தல்
வீட்டின் பின்புறத்தில் அல்லது முன்புறத்தில் இருக்கும் காலி இடத்தை தேர்வு செய்யலாம். ஏனெனில் குடும்ப நபர்களை கொண்டு முறையாக பராமரிக்கவும், வீட்டின் சமயலறை மற்றும் குளியலறை கழிவு நீரை பயன்படுத்திக் கொள்ளவும் இது சுலபமாக இருக்கும். காலியாக இருக்கும் இடத்தைப் பொறுத்தும், எத்தனை நபருக்கு காய்கறி தேவைப்படும் என்பதை பொறுத்தும் காய்கறி தோட்டத்தின் அளவு நிர்ணயம் செய்ய வேண்டும். காய்கறித் தோட்டத்தை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். ஆனால் முடிந்தவரை சதுரவடிவத்தைவிட செவ்வக வடிவ வீட்டுக்காய்கறி தோட்டத்தை தேர்வு செய்யலாம். ஊடுபயிர் சாகுபடி மற்றும் தொடர் சாகுபடி முறையை மேற்கொள்ள வேண்டும். நான்கு அல்லது ஐந்து நபர்கள் உள்ள ஒரு சராசரி குடும்பத்திற்கு தேவைப்படும் காய்கறியை உற்பத்தி செய்ய 5 சென்ட் இடம் இருந்தால் போதுமானதாகும்.
நிலம் தயார் செய்தல்
நிலத்தை 30-40 செமீ ஆழத்திற்கு மண்வெட்டி கொண்டு கிளறிவிட வேண்டும். கற்கள், புதர்கள், களைகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். 100 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு எருவை இட்டு நன்கு கலக்கி விட வேண்டும். தேவைக்கேற்ப 45 செமீ ஜ் 60 செமீ என்ற இடைவெளியில் பார்சால் அமைக்க வேண்டும். தேவைப்பட்டால் படுக்கை முறையிலும் சாகுபடி செய்யலாம்.
விதைத்தல் மற்றும் நடவு செய்தல்
நேரடி விதைப்பு பயிர்களான வெண்டை, கொத்தவரை மற்றும் தட்டைப்பயறு போன்றவற்றை பாரின் ஒரு புறத்தில் 30 செமீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். முழு செடியாக பிடுங்கப்படும் அல்லது அறுவடை செய்யப்படும் தண்டுக்கீரை, சிறுகீரை ஆகியவற்றை, 1 பகுதி விதை 20 பகுதி மணல் என்ற விகிதத்தில் கலந்து கை விதைப்பு செய்யவேண்டும். சின்ன வெங்காயம், புதினா, கொத்தமல்லி போன்றவற்றை வரப்பின் ஓரத்தில் நட வேண்டும்.
நாற்று நடவு செய்யும் பயிர்களான தக்காளி, கத்தரி, மிளகாய் போன்றவற்றை நாற்றங்கால் படுக்கைகளில் அல்லது தொட்டிகளில் ஒரு மாதத்திற்கு முன்பே விதைக்க வேண்டும். விதைப்பு முடிந்து மண்ணை மூடியவுடன், எறும்பு வருவதை தடுக்க 250 கிராம் வேப்பம்புண்ணாக்கை தூவவேண்டும். விதைத்து 30 நாட்கள் கழித்து தக்காளியையும், 40-45 நாட்கள் கழித்து கத்தரி, மிளகாய், சிறு வெங்காயம் ஆகியவற்றையும் நாற்றங்களில் இருந்து எடுத்து நடவு செய்ய வேண்டும். தக்காளி, கத்தரி, மிளகாய் ஆகியவற்றிற்கு 30-45 செமீ என்ற இடைவெளியில் பாரின் ஒரு பக்கத்திலும், சின்ன வெங்காயத்திற்கு 10 செமீ இடைவெளியில் பாரின் இரு பக்கமும் நட வேண்டும்.
நடவு செய்தவுடன் முதல் தண்ணீரும் நட்ட மூன்றாம் நாள் மறுதண்ணீரும் பாய்ச்ச வேண்டும். நாற்றுகளுக்கு இளம் பருவங்களில் இரு நாட்களுக்கு ஒரு முறையும், பிற்பருவங்களில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.
ஒரு வருடத்திற்கு, வீட்டுச்செலவுக்கு தேவைப்படும் காய்கறிகளை தொடர்ச்சியாக உற்பத்தி செய்வதே வீட்டு காய்கறி தோட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். சில முக்கிய வழிமுறைகளை கையாண்டு இந்த நோக்கத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
பல பருவ தாவரங்களை மற்ற பயிர்களில் நிழல் படியாதவாறும், ஊட்டச்சத்திற்கு போட்டி ஏற்படாதவாறும் தோட்டத்தின் மூலையில் நடவேண்டும்.
தோட்டத்தின் நடுவில் உள்ள நடைபாதை மற்றும் ஏனைய நடைபாதையின் அருகிலும் குறுகிய கால பயிர்களான கொத்தமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, பாலக் போன்றவற்றை நட வேண்டும்.
ஊடுபயிராக தண்டுகீரை, சிறுகீரை பயிர் செய்யவும்.
பலவருட பயிர்கள்
முருங்கை, வாழை, பப்பாளி, கப்பக்கிழங்கு, கருவேற்பிலை, அகத்தி.
பயிரிடும் திட்டம்
இந்திய சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு மாதிரி வீட்டுக் காய்கறி தோட்டத்திற்கான பயிரிடும் திட்டமுறை (மலை பகுதி தவிர)
பாத்தி எண்
காய்கறியின் பெயர்
பருவம்
01.
தக்காளி மற்றும் வெங்காயம்
ஜுன் – செப்டம்பர்
முள்ளங்கி
அக்டோபர் – நவம்பர்
பீன்ஸ்
டிசம்பர் – பிப்ரவரி
வெண்டைக்காய்
மார்ச் – மே
02.
கத்தரி
ஜுன் – செப்டம்பர்
பீன்ஸ்
அக்டோபர் – நவம்பர்
தக்காளி
ஜுன் – செப்டம்பர்
தண்டுகீரை, சிறுகீரை
மே
03.
மிளகாய் மற்றும் முள்ளங்கி
ஜுன் – செப்டம்பர்
தட்டவரை / காராமணி
டிசம்பர் – பிப்ரவரி
பெல்லாரி வெங்காயம்
மார்ச் – மே
04.
வெண்டைக்காய் மற்றும் முள்ளங்கி
ஜுன் – ஆகஸ்டு
முட்டைக்கோஸ்
செப்டம்பர் – டிசம்பர்
கொத்தவரை
ஜனவரி – மார்ச்
05.
பெரிய வெங்காயம்
ஜுன் – ஆகஸ்டு
பீட்ருட்
செப்டம்பர் – நவம்பர்
தக்காளி
டிசம்பர் – மார்ச்
வெங்காயம்
ஏப்ரல் – மே
06.
கொத்தவரை
ஜுன் – செப்டம்பர்
கத்தரி மற்றும் பீட்ருட்
அக்டோபர் – ஜனவரி
07.
பெரிய வெங்காயம்
ஜுலை – ஆகஸ்டு
கேரட்
செப்டம்பர் – டிசம்பர்
பூசணி
ஜனவரி – மார்ச்
08.
மொச்சை, அவரை
ஜுன் – ஆகஸ்டு
வெங்காயம்
ஜனவரி – ஆகஸ்டு
வெண்டைக்காய்
செப்டம்பர் – டிசம்பர்
கொத்தமல்லி
ஏப்ரல் – மே
மேற்கண்ட திட்டமுறையில் வருடம் முழுவதிற்கும் ஒவ்வொரு பாத்தியிலும் சில பயிர்களை இடைவிடாது இடம் பெறச்செய்யப்பட்டுள்ளன. முடிந்த அளவு ஒவ்வொரு பாத்தியிலும் ஒரு நெடுங்கால பயிரும், குறுகிய கால பயிரும் இணைக்கப்பட்டுள்ளன.
காய்கறி தோட்டத்தின் பயன்கள்
முதலில் தங்கள் குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை பூர்த்தி செய்து கொண்டு, பின்னர் அளவுக்கு அதிகமாக உள்ளவற்றை விற்கவும் அல்லது பண்டம் மாற்றி கொள்ளவும் செய்யலாம். சில சமயங்களில், வருமானம் ஈட்டுவதே காய்கறி தோட்டத்தின் முதன்மையான நோக்கம் ஆகிவிடுகிறது. எந்த சமயத்திலும் ஒரு நல்ல ஊட்டச்சத்தின் அவசியத்தை மனதில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஊட்டச்சத்தும், வருவாய் ஈட்டுவதும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையனவாகும்.
பொருளாதார ஆதாயங்களும் பயன்களும்
காய்கறி மற்றும் வருமானம் ஆகிய இரண்டு ஆதாயங்களும் வீட்டு காய்கறி தோட்டத்தில் கிடைக்கிறது.
வீட்டில் பராமரிக்கப்படும் கால்நடைக்கு தேவையான தீவனமும் மற்றும் ஏனைய வீட்டு உபயோகத்திற்கு தேவைப்படும் விறகு போன்ற மூலப்பொருட்களும் கிடைக்கின்றன.
வீட்டுக்காய்கறி தோட்டத்துடன் கூடவே கால்நடை வளர்ப்பு, பெண்கள் சுயவருமானம் பெறுவதற்கு மூலாதாரமாக அமைகின்றது.
Go to top
மண் பூச்சு
தானியங்களை எளிதாக பாதுகாக்கும் ‘மண் பூச்சு’ தொழில்நுட்பம்
மத்திய, மாநில அரசுகளின் சேமிப்பு கோடவுன்களில் ‘டன்’ கணக்கில் அரிசி, தானியங்கள் மூடைகளாக அடுக்கி வைத்து சேமிக்கின்றனர். உணவு தானியங்களில் இருந்து உற்பத்தியாகும் புழு, பூச்சி, வண்டு, பெருச்சாளிகள் பல்கி பெருகி கோடவுன்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பெருமளவு பரவி வருகிறது. கடும் துர்நாற்றமும் ஏற்பட்டு வருகிறது. வீரியமான பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தாலும் இவைகளை கட்டுப்படுத்த இயலவில்லை.
உணவு பொருள் சேமிப்பு கோடவுன்கள் முறையாக பாதுகாக்கப்படாததால் ஆண்டுதோறும் நுாற்றுக்கணக்கான டன் எடையளவு உணவு பொருட்கள் வீணாகி வருகிறது.
‘மண் பூச்சு’ தொழில்நுட்பம்சரந்தாங்கி கிராம மக்கள் உணவு தானியங்கள் புழு, பூச்சி, வண்டு, பெருச்சாளிகளின் தாக்குதல் இன்றியும், பல ஆண்டுகள் வரை கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் மண் பூச்சு தொழில்நுட்ப முறையை பாரம்பரியமாக கையாண்டு வருகின்றனர்.
மண் பூச்சு முறையில் பாதுகாக்கப்படும் தானியங்களை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு பின் பயன்படுத்தும்போது தானியங்கள் மீது மதிப்புக்கூட்டு அதிகரித்தும், நுண்ணுாட்ட சத்துக்கள் அபரிமிதமாக இருப்பதாகவும் இக்கிராம மக்கள் கூறுகின்றனர்.
தானியங்கள் மீது ‘மண் பூச்சு’விவசாயி நல்லம்மாள்:
ஒரு ஏக்கரில் துவரையை ஆடியில் விதைத்து, தையில் அறுவடை செய்தோம்.
ரசாயனம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவது கிடையாது.
பழமையான இயற்கை முறையில் விவசாயம் செய்வதால் கூடுதல் மகசூல் கிடைக்கிறது.
இந்தாண்டு மழை இல்லாததால் விளைச்சல் குறைவு. எனினும் 5பேருக்கு ஓராண்டுக்கு தேவையான துவரை கிடைத்தது.
துவரம் பருப்பு கெட்டுப்போகாமல் இருக்க செம்மண்ணை பாத்திரத்தில் வைத்து தண்ணீர் கலந்து, அதில் தானியங்களை நன்கு பிரட்டி எடுத்து வெயிலில் பரப்பி காய வைக்க வேண்டும்.
நன்றாக காய்ந்த துவரம் பருப்பை பாத்திரத்தில் சேமிக்க வேண்டும்.
பல ஆண்டு கெட்டுப்போகாது மசால் கடலை போல் துவரம் பருப்பு முழுவதும் படர்ந்திருக்கும் செம்மண் கலவை எளிதாக உதிராது.பருப்புடன் கெட்டியாக ஒட்டிக்கொள்ளும்.
இவற்றை மாதம் ஒரு முறை வெயிலில் காய வைக்க வேண்டும். இப்படி செய்யும்போது நான்கு ஆண்டுகள் வரை பருப்பு கெடாது. புழு, பூச்சி, வண்டு, பெருச்சாளி அண்டாது.
தேவைப்படும் போது செம்மண் கலந்த பருப்பை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் பருப்பை தண்ணீரில் கழுவி சமைக்க பயன்படுத்தலாம்.
இயற்கை முறையில் பதப்படுத்தப்படும் துவரம் பருப்பு மதிப்புக்கூடியும், நுண்ணுாட்ட சத்துக்கள் அபரிமிதமாக இருக்கும். மண் பூச்சு முறை அனைத்து தானியங்களுக்கும் பொருந்தும், என்றார்.-கா.சுப்பிரமணியன், மதுரை.
Go to top
விதை நேர்த்தி
விதை நேர்த்தி செய்வதால் ஏற்படும் பலன்கள்
விதை மற்றும் மண் மூலம் பரவும் நோய்க்கிருமிகள் மற்றும் பூச்சிகளிலிருந்து முளைக்கும் விதை மற்றும் விதை நாற்றுகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது.விதை முளைப்புத் தன்மையை அதிகப்படுத்துகின்றது.குறித்த காலத்திற்கு முன், சீரான நிலை மற்றும் வேக வளர்ச்சியை அடைய உதவுகிறது.பயிறு வகைகளில், வேர் முடிச்சுகள் உருவாகுவதை அதிகப்படுத்துகின்றது.சத்துக்களை மண் மற்றும் இலை வழிகளில் செலுத்துவதைவிட, இம்முறை சிறந்தது.குறைந்த/ அதிக ஈரத்தன்மை போன்ற எதிர்மறையான சுழ்நிலைகளிலும் சீரான பயிர் வளர்ச்சியை தருகிறது.
விதை நேர்த்திக்கான செயல்முறை
விதை நேர்த்தி என்ற சொல்லானது இடுபொருள் மற்றும் செய்முறைகளை குறிக்கும் ஒரு பதமாகும். கீழ்கண்ட முறைகளில் ஏதாவது ஒரு முறையில் விதை நேர்த்தியானது செய்யப்படலாம்.
விதை மேல் பூசுதல் -இது பொதுவாக செய்யப்படும் ஒரு விதை நேர்த்தி முறையாகும். இந்த முறையில் விதையானது, உலர்ந்த வகை பொருட்களைக் கொண்டோ அல்லது கஞ்சி போன்ற பொருளில் நனைத்தோ அல்லது திரவப் பொருட்களைக் கொண்டோ முலாம் பூசப்படுகின்றது. இந்த விதை நேர்த்தி முறை பண்ணையிலும் தொழிற்சாலைகளிலும் செயல்ப்படுகிறது. பொதுவாக விதையுடன் பூச்சிக் கொல்லி மருந்துகளைக் கலப்பதற்கு மண் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றது. இதை தவிர விதைகளை பாலிதீன் பைகளின் மீது பரப்பி, அதன் மீது தேவையான அளவு மருந்தினை தெளித்தும் விவசாயிகள் விதை நேர்த்தி செய்யலாம்.விதை மேலுறையிடுதல் -இம்முறையில் ஒரு சிறந்த ஒட்டும் பொருளைக் கொண்டு, நேர்த்தி செய்ய வேண்டிய விதையின் மேல் ஒட்டப்படுகிறது. தொழிற்சாலைகளில் விதை மேலுறையிடுவதற்கு, உயர்ந்த விதை நேர்த்தி தொழில்நுட்பமானது தேவைப்படுகிறது.விதை முலாம் -இம்முறையானது விதைநேர்த்தி முறைகளில் மிகச் சிறந்த உயரிய முறையாகும். இதன் மூலம் விதையின் அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு, விதை முலாம்பூசப்பட்டு, அதைக் கையாளுவது எளிதாக்கப்படுகின்றது. இத்தகைய விதை நேர்த்தி முறைக்கு தனித்துவம் வாய்ந்த இயந்திரங்கள், செயல்முறை மற்றும் தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. இது மிகவும் அதிக செலவாகக் கூடிய ஒரு செயல்முறையாகும்.
விதை நேர்த்தி குறிப்புகள்
விதை மூலமாகப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதைகளை விதைநேர்த்தி செய்துகொள்வது அவசியம்.
அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும் விவசாயிகளுக்கு நடப்பு பருவத்துக்குத் தேவையான இடுபொருள்களான விதைநெல், உரங்கள் இருப்பு வைத்து விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது.
விதைக்கும் முறைகள்
விதை மூலமாகப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதை நேர்த்தி செய்து விவசாயிகள் விதைக்க வேண்டும்.ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் மருந்தை கொண்டு விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்கள், தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற தங்கள் பகுதி வேளாண்துறை களப்பணியாளர்களை அணுகி பயன்பெறலாம்
No comments:
Post a Comment