சிறுதானியங்கள் - Millets



பொருளடக்கம்


கம்பு


கம்பு

சிறுதானியங்களில் கம்பு முதலிடம்

அதிகமாகப் பயிரிடப்படும் சிறுதானியங்களில் கம்பு முதலிடத்தை பிடிக்கிறது. பொதுவாக ஆப்ரிக்கக் கண்டத்தில் இது தோன்றியதாகக் கொள்ளப்படுகின்றது. ஏறத்தாழ 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் விளைந்து உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கம்பு மனிதர்களுக்கு உணவாகவும், கால்நடைத் தீவனமாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகின் மொத்த சிறுதானிய உற்பத்தியில் 55% இடத்தை கம்பு பிடித்திருக்கிறது.

கம்பில் உள்ள உயிர்ச்சத்துகள்

தானியங்களிலேயே அதிக அளவாக கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது.

100 கிராம் கம்பில்,

42 கிராம் கால்சியம் சத்து உள்ளது.

11 முதல் 12 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது.

பி 11 வைட்டமின் சத்து 0.38 மில்லி கிராம் உள்ளது.

ரைபோபிளேவின் 0.21 மில்லி கிராம் உள்ளது.

நயாசின் சத்து 2.8 மில்லி கிராம் உள்ளது.

வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிகிதம் பலப்படி நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும்.

கம்பு - மருத்துவ பயன்கள்

* இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

* மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர்.

* இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

* அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு.

* கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

* உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும்.

* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல்  உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் கம்பு! நலம் நல்லது

இந்தப் பூமியில் மனிதன் கொண்டுவந்த மிக நுட்பமான முதல் தொழில்நுட்பம் எது தெரியுமா? வேளாண்மை. நீங்கள் ஒரு மூட்டை நெல்லைச் சொந்தமாக விளைவிக்க வேண்டும் என்றால், உங்களுக்குக் குறைந்தது 70 தொழில்நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டும், வானிலை அறிவு உட்பட. அந்த அளவுக்குச் சிறப்புப் பெற்ற வேளாண்மையில் விளைவிக்கப்படும் தானியங்களில் அரிசியோடு சேர்த்து மிக முக்கியமானவை கம்பு, கேழ்வரகு, சோளம். இவற்றில் கம்பு தனிச் சிறப்புகொண்டது. சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரச்சாதம்... கம்பு.

சோளத்தைப் போலவே கம்பும் ஆப்பிரிக்காவில் இருந்து இங்கே வந்ததுதான். ஆனால், கி.மு. 2500-களிலேயே இங்கு கம்பு பயிரிடப்பட்டு இருந்தது என்பதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியப் பாடலிலும் சித்த மருத்துவப் பயன்பாட்டிலும் இந்தத் தானியம் இருப்பதே இதன் தொன்மைக்குச் சான்று.

அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச்சத்து என அனைத்துச் சத்துக்களுமே அதிகம்கொண்ட தானியம் கம்பு. கன்னடத்தில் `பஜ்ரா’ என்று அழைக்கப்படும் கம்பு, கர்நாடகாவிலும் ஒரு சில வட மாநிலங்களிலும் இன்றும் மிகப் பிரபலம்.

அரிசியைக் காட்டிலும் கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச்சத்து உள்ள இந்தத் தானியத்தை வேகவைக்க கொஞ்சம் மெனக்கெட வைக்கும். சாதாரண அரிசிபோல அப்படியே கழுவி வேகவைக்க முடியாது. மிக்ஸியில் ஓர் அடிபோட்டு, இரண்டாக உடைத்து, இரண்டு மணி நேரம் ஊறவைத்து, அதன் பிறகு உலையில் போட்டு வேகவைத்தால்தான் நன்கு குழைவாக வரும். ஆனால், சுவையிலோ, பிற அரிசி வகையறாக்கள் கம்பின் பக்கத்தில்கூட வர முடியாது. அத்தனை அருமையாக இருக்கும்.

கம்பு... யாருக்கு ஏற்றது... எப்படிச் செய்யலாம்... என்னென்ன பலனகள்?

* அனைத்துச் சத்துக்களுமே சற்றுத் தூக்கலாக உள்ள கம்பு, வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் தொடங்கிய பெண் குழந்தைகளுக்கும் மாதம் நான்கு அல்லது ஐந்து முறை கண்டிப்பாகத் தரவேண்டிய தானியம்.

* கம்பு என்றாலே அதனைக் கூழாக, கஞ்சியாகத்தான் சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு நம்மில் பலருக்கும் உண்டு. கஞ்சியாக மட்டும் அல்ல; சாதமாக, அவலாக, பொரியாக... எப்படி வேண்டுமானாலும் கம்பைச் சாப்பிடலாம்.

* அருமையான நாட்டுக்கோழி பிரியாணியோ, ஹைதராபாத் தம் பிரியாணியோகூட கம்பில் செய்து கலக்கலாம். கம்பை இரண்டாக உடைத்து, தண்ணீரில் ஊறவைத்து, அதற்குப் பிறகு அரிசியில் எப்படி பிரியாணி செய்கிறீர்களோ அப்படியே செய்யவேண்டியதுதான். பீன்ஸ், கேரட், ரொட்டித்துண்டு போட்டு வெஜிடபுள் பிரியாணியும் செய்யலாம்.

* கம்பு ரொட்டி சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஏற்றது. கம்பில் உள்ள லோ கிளைசெமிக் தன்மையாலும், அதில் ஏற்கெனவே உள்ள கூடுதல் நார்ச்சத்தினாலும், காலை / மதிய உணவில் இதைச் சாப்பிடும்போது பட்டை தீட்டிய அரிசிபோல், கம்பு ரொட்டியும் கம்பஞ்சோறும் பிரச்னையைத் தராது.

* அரிசியைப்போல் அல்லாமல், கம்பரிசி, உமி தொலி நீக்கிய பின்னரும் அதன் உள் பகுதியில் அத்தனை நல்ல விஷயங்களையும் தன்னகத்தே வைத்திருக்கும். தவிர, இதில் உள்ள `அமைலோஸ் அமைலோபெக்டின்’ (Amylose Amylopectin) அமைப்பு நெல் அரிசியைக் காட்டிலும் மாறுபட்டது. இன்னும் இறுக்கமானது. அதனால்தான், ஜீரணத்துக்கும் கொஞ்சம் தாமதமாகும். இந்த அமைப்பினால் மெள்ள மெள்ளவே கம்பின் சர்க்கரையை ரத்தத்தில் கலக்கச் செய்வதால், லோகிளைசெமிக் உணவாக இருந்து சர்க்கரை நோயாளிக்குப் பெரிதும் உதவுகிறது.

* சத்துச் செறிவு அடர்த்தியாக உள்ள கனத்த உணவு என்பதால், என்னதான் பிடித்த குழம்பை, பிடித்தவரே பரிமாறினாலும் கம்பு சாதத்தை ஒரு கட்டு கட்ட முடியாது. அளவாகச் சாப்பிடக்கூடியது என்பதால், எடை குறைக்க விரும்புவோருக்கும் இது ஓர் அற்புதத் தானியம்.

* டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரைநோய் உள்ளவர்களில் சிலர் மூன்று வேளையும் சப்பாத்தியே கதி என்று கிடப்பார்கள். இது தேவை இல்லை. சர்க்கரைநோய்க்கான சரியான சிகிச்சையை, மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொண்டு, வாரம் இரு நாள் கம்பஞ்சோறு, இரு நாட்களுக்கு புழுங்கல் அரிசிச் சோறு, இன்னொரு நாள் தினை சாதம், இரவில் கேழ்வரகு அடை, எப்போதாவது காலை உணவாக வரகரிசிப் பொங்கல், சோள தோசை, குதிரைவாலி இட்லி என்று சாப்பிடப் பழகினால், சப்பாத்திக்கு அடிமை வாழ்க்கை வாழவேண்டிய அவசியம் இல்லை. இப்படிப் பல தானியங்களைக் கலந்து எடுத்துக்கொண்டு, கொஞ்சம் உடல் உழைப்பும் கொடுத்து வாழ்ந்தால், சர்க்கரைநோய் எப்போதும் கட்டுக்குள்ளேயே இருக்கும்.

* கம்பு, செல்கள் பாதுகாப்புக்கு உதவும் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

கொஞ்சம் சூட்டு உணவு என்பதால், கம்பு சாப்பிடும்போது குளிர்ச்சிக்கு மோர், சின்ன வெங்காயத்தைச் சேர்த்துக்கொள்வது நல்லது.


Go to top



No comments:

Post a Comment